‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு – வேன் தீ வைத்து எரிப்பு -கடைக்கு சீல்!
![](https://www.boston-neurosurgery.com/wp-content/uploads/2022/05/New-Project-2022-05-02T080855.webp)
கேரள மாநிலத்தில், ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் என்ற இடத்தில் உள்ள ஐடியல் கூல் பார் என்ற கடையில், அருகே உள்ள டியூஷன் சென்டரில் படிக்கும் மாணவர்கள் பலர், அண்மையில் உணவருந்தி உள்ளனர். இந்த மாணவர்கள் பலருக்கு வீடு திரும்பியதும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அந்த கடையில் தயாரிக்கப்பட்ட தரமற்ற உணவை உட்கொண்டதால் 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கண்ணூர் மாவட்டம் கரிவாலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி தேவனந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இவரது தந்தையும் ஐந்து மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கடை உடனடியாக அடைக்கப்பட்ட நிலையில், கடையில் பணிபுரியும் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் கடை உரிமையாளரையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மாணவர்களை, மாநில அமைச்சர் கோவிந்தன், மாவட்ட மருத்து அலுவலர் ராம்தாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், கடை உரிமையாளர், ஊழியர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 304, 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு கடைகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பண்டாரி ஸ்வாகத் ரவீர்சந்த் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, மாவட்டம் முழுவதும் உள்ள உணவு கடைகளில் உணவின் தரம் மற்றும் கலப்படம் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.